தமிழில் எழுதப்பட்ட மிக மிக அழகான வரிகள், குழப்பும் வரிகள், காட்டாற்றைப் போல் கோபித்துக்கொண்டு பாயும் வரிகள், நீரோடை போல் மெதுவாகத் ததும்பும் வரிகள்.. லா.ச.ராவை புரிந்துக்கொள்வது எளிதல்ல. சில வேளைகளில் ஒருவித அந்தரங்க ஹாஸ்யமாக எல்லோரையும் முட்டாளடிக்கிறாரா என்று தோன்றும். இந்தத் தோற்றம் சட்டென்று தெறிக்கும் சில வரிகளில் மறைந்துவிடும். இவர் கதைகளில் ஊடாடுவது பக்தி, கடவுள் பக்தி, குடும்ப அமைப்பின் மேல் பக்தி, பக்தியின் மேல் பக்தி, தமிழ் கொச்சையில் விளையாடும் அழகின் மேல் பக்தி, துக்கத்தின் மேல், கோபத்தின் மேல், ஏழை மேல், சங்கேதங்களின் மேல்.. ராமாமிருதத்தைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப் பேச லாயக்கில்லை - சுஜாதா