'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பதும் இவ் வகை வரிசை முறையிலே அமைந்திருத்தல் கவனிக்கத்தக்கது. இந் நூற் செய்யுட்களில் 18 பாடல்கள் சிதைந்துள்ளன (1, 8, 14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைந்துள்ளன. ஏனைய பதினைந்தின் அடிகளும் சொற்களும் பல் வேறு வகையில் சிதைந்துள்ளன. எவ்வித சிதைவும் இன்றி உள்ளவை நெய்தல் திணைப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களே.