அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் சிறுகதைகளும் ஆன்மிக கட்டுரைகளும் எழுதி வரும் கி. குருமூர்த்தி ('மாயூரன்') சிறுவர் இலக்கியத் துறையில் தனிச் சிறப்பு பெற்றவர். பள்ளிக்கூடங்கள், இலக்கிய அமைப்புகள், வானொலி, தொலைக்காட்சி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகளில் குழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லி மகிழ்வித்திருக்கிறார்.
இத்துறையில் பல விருதுகள் பெற்றுள்ள மாயூரன் மேதகு பாரதக் குடியரசு தலைவர் அவர்களால் கேடயம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் பாராட்டப் பெற்றவர். தமிழில் தரமான முன்னணி பத்திரிகைகளிலும், நாளேடுகள் மற்றும் தீபாவளி மலர்களிலும் பெரியவர்களுக்காகவும் சிறுகதைகள் எழுதி வருகிறார். சின்னச் சின்ன வாக்கியங்கள், அலுப்பு தட்டாத எளிய நடை, அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள், முற்றிலும் அறிமுகமான கதாபாத்திரங்கள், பயன் தரும் செய்திகள், படிப்பினைகள் இவை இவர் எழுத்துகளின் சிறப்பு.